இரவும் பகலும் இடைவிடாமல்
இருந்தும் இல்லா வானத்தில்
இரவும் இன்றிப் பகலும் இல்லா
இனம்புரி யாத மோனத்தில்
உறவும் பிரிவும் பொருளில்லாத
ஒற்றுமை சிரிக்கும் பயணத்தில்
ஊரே அல்லா வானில் ஊர்ந்தோர்
ஊருக் கிறங்கி வந்தேன்
அமர்ந்த படியே அயர்ந்து மயங்கும்
அற்ப உடலைப் பார்க்கின்றேன்
சமையாக் காலம் சமைந்த நேரம்
சடுகுடு ஒருதலை ரசிக்கின்றேன்
இமைக்கும் பொழுதும் இமையாக் கணமும்
இசைந்த விதத்தை வியக்கின்றேன்
இல்லா திருந்தே நில்லா தியக்கும்
இறைவனின் இசையை ரசிக்கின்றேன்!
நேற்றிரவு நியூஜெர்சி வந்து சேர்ந்தேன். மனதிற்கினிய ராமகிருஷ்ணா – ஜோதி வீட்டில் நன்குறங்கி நலமாய் உள்ளேன்.
ரமணன்
15.5.26/வெள்ளி/8.40
Leave a Reply